புதுகை மே 28: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளை பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் கண்காணிக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற(மே.27) பள்ளிகள் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துதல் தொடர்பாக கல்வித்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்குப்பின்னர், ஆட்சியர் கூறியதாவது:
தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் சார்பில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளை எவ்வாறு கண்காணித்து முறைப்படுத்துநது தொடர்பான மாவட்ட அளவிலான கல்வித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 342 பள்ளிகளில் பயிலும் பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பினை ஆசிரியர்கள் தங்களது வீடுகளில் இருந்து நடத்தி வருகின்றனர். இந்த ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகளில் உள்ள பெற்றோர்- ஆசிரியர் சங்கத்தின் மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தினமும் நடைபெறும்; ஆன்லைன் வகுப்புகள் முழுவதும் பதிவு செய்யப்பட்டு, இப்பதிவுகள் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் கண்காணிக்கப்படுவதுடன் இக்குழுவில் மாணவர்கள் தரப்பிலிருந்து 2 மாணவி களை கண்டிப்பாக சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
மேலும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள், ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள் குறித்த விவரங்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகள் குறித்த சந்தேகங்கள், விவரங்கள், கருத்துக்கள் மற்றும் புகார்கள் தெரிவிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் 04322-222180 என்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர் உமாமகேஸ்வரி. இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி நிருபர்
புதுகை டுடே