புதுகை, மே,28: கோவிட் தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்றினால் கொரோனா தொற்று குறையும் என்றார் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் (28.05.2021) நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, எம்எல்ஏ- சின்னதுரை ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது: தமிழக முதல்வர் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தொற்றை தடுக்கும் வகையில் அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கினைத்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தற்போது கறம்பக்குடி அரசு மருத்துவமனை மற்றும் மழையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாம் பார்வையிட்டு கோவிட் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை, சிகிச்சைகள், மருத்துவ வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தேவையான படுக்கை வசதிகள், கோவிட் கவனிப்பு மையங்கள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவிட் சிகிச்சைக்கு தேவைக்கேற்ப கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கோவிட் நோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்தும் வகையில் அதிக அளவிலான மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அரசு கோவிட் தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்றினால்தான் நோயை முற்றாக ஒழிக்க முடியும் வேண்டும் என்றார் அமைச்சர் மெய்யநாதன்.
இதைத்தொடர்ந்து அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், பெரியாளூர், நெய்வத்தலி, மேற்பனைக்காடு மேற்கு மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், நெடுவாசல், கோவிலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் கோவிட் தடுப்பூசி முகாம்களையும் அமைச்சர் பார்வையிட்டார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், பொது சுகாதார துணை இயக்குநர் விஜயக்குமார், வழக்குரைஞர் கே.கே.செல்லப்பண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி ராம்மோகன் நிருபர்.
புதுகை