புதுக்கோட்டை, ஜூன்8: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசால் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இச்சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள் இந்த அரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.05.2021 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 27.08.2021-தேதிக்குள் இணைய தளம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணைய தளம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பித்தும் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி 27.8.2021 வரை பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்து கொள்ளலாம்.
செய்தி புதுகை நிருபர்.