மகளிர் சுய உதவிக் குழுக்களை கடன் தவணை செலுத்த நுண்நிதி வங்கிகள், நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது
ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தல்
புதுக்கோட்டை, ஜூன் 7: புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ள நுண்நிதி வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் கடன் தவணைச் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் .பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்பட அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்நிலையில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் NGO சார்ந்த குழுக்கள் பெற்றுள்ள கடன்களை திரும்ப செலுத்த வேண்டும் என்று நுண்கடன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகின்றன. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியுள்ள நுண்நிதி வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் மூலம் கடன் தவணைச் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும் பேரிடர் காலத்தில் வீடுகளுக்குச் சென்று தவணைத்தொகை செலுத்துமாறு நிர்பந்திக்கக் கூடாது.
மேலும், நுண்நிதி நிறுவனங்கள் செயல்பாடுகள் தொடர்பான புகார் ஏதேனும் இருந்தால் 18001021080 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
செய்தி புதுகை நிருபர்.