புதுக்கோட்டைமாவட்டத்தில் முன்களப்பணியாளர்களுக்கு கோவிட் நிவாரண உதவிகளை அமைச்சர் ரகுபதி வழங்கல்
புதுக்கோட்டை, சூன் 12:புதுக்கோட்டைமாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுக்கு கோவிட் நிவாரண உதவிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி வழங்கினார்.
பின்னர் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: தமிழகத்தில் கோவிட் நோய் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நோய் தொற்று காலங்களில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் கோவிட் நிவாரண உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் சார்பிலும் பொதுமக்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கோவிட் நிவாரண உதவிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவிட் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மணமேல்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களும் மற்றும் காவல் நிலையங்களுக்கு தேவையான முகக்கவசம், கைகழுவும் திரவம் உள்ளிட்ட கோவிட் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அறந்தாங்கி வடக்கரை முருகன் கோவில் அருகில் ரோட்டரி சங்கம் சார்பிலும், பள்ளிவாசல் மற்றும் கலைஞர் மன்றத்திலும் பொதுமக்களுக்கு கோவிட் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதேபோன்றுபுதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் இன்று மாலை சிட்டி யூனியன் வங்கி சார்பில் 15 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளும் வழங்கப்பட உள்ளது.
முதல்வர் ஸ்டாலின ஆக்கப்பூர்வமாக மேற்கொண்ட கோவிட் தடுப்பு நடவடிக்கையின் பயனாக தமிழகம் முழுவதும் நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருந்த போதிலும் தமிழகத்தை கோவிட் தொற்று இல்லாத நிலையை விரைந்து ஏற்படுத்திட முதலமைச்சருக்கு உறுதுணையாக பல்வேறு தனியார் அமைப்புகளும் கோவிட் தடுப்பு நடவடிக்கையில் உறுதுணையாக இது போன்ற உதவிகளை செய்து வருவது பாராட்டுக்குரியது என்றார் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.
இந்நிகழ்வில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் , அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், மணமேல்குடி ஒன்றியக்குழுத் தலைவர் இ.ஏ.கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி புதுகை நிருபர்.